×

ராமநாதபுரம் அருகே குறியீடுகளுடன் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கண்டெடுப்பு...!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே குளத்தூரில் குறியீடுகளுடன் 2 ஆயிரம் ஆண்டு பழமையான கருப்பு, சிவப்பு பானை ஓடுகளை ராமநாதபுரம் தொல்லியல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். ராமநாதபுரம் அருகே குளத்தூர் காலனி கிழக்கே காரான்கோட்டை என்ற இடத்தில் பண்ணைக்குட்டை தோண்டியபோது, பானை ஓடுகள் வெளிவந்தன. அங்கு, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, குளத்தூர் அரசு உயர்நிலை பள்ளி கணித ஆசிரியர் பால்துரை, தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் காவ்யா, பர்ஜித், தனபால்,  ரஞ்சித் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தனர். இதுகுறித்து ராஜகுரு கூறியதாவது:
பண்ணைக்குட்டை தோண்டிய இடத்தில் கருப்பு, சிவப்பு நிற சுடுமண் தட்டுகளின் உடைந்த பகுதிகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்பு தாதுக்கள், இரும்பு கழிவுகள், தானியங்கள் வைக்க பயன்படுயத்தி குளுமையின் தடித்த ஓடுகள், உடைந்த பானை தாங்கி, பானை மூடிகள், மான் கொம்புகள் மற்றும் குறியீடுகள் உள்ள 3 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதில் மூன்று கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் திரிசூலம் போன்ற குறியீடு கீழடியிலும், மரியராயபுரத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘த’ எனும் தமிழி எழுத்து, சூலம் ஆகிய குறியீடுகள்  கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த மானின் உடைந்த கொம்புகள் உள்துளையுடன் உள்ளன. இது கிளைகள் உள்ள உழை மானின் கொம்புகள் ஆகும். இரும்பு கழிவுகளுடன் உடைந்த உருக்காலையின் சிறிய பகுதியும் கிடைத்துள்ளதால் இங்கு இரும்பு உருக்காலை செயல்பட்டிருக்கலாம். கண்டெடுத்த பொருட்களை கொண்டு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இரும்பு காலத்தில் காரான்கோட்டை என்ற பெயரில் ஒரு சிற்றூர் இங்கு இருந்ததை அறிய முடிகிறது. மருத்துவ குணமுள்ள காரான் என்ற ஒரு பாரம்பரிய நெல்லின் பெயரில் இப்பகுதி அழைக்கப்படுகிறது. இதே பெயரில் ரெகுநாதபுரம் அருகில் ஒரு ஊர் உள்ளது  குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ramanadhapura , Discovery of black and red pottery tiles with symbols near Ramanathapuram
× RELATED ராமநாதபுரம் கல்லூரி மாணவர்...